எதையுமே கடவுள் வாழ்த்துடன் தொடங்குவதுதானே மரபு!இதோ--
”பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா !”
நான் கேட்டுவிட்டேன்,கடவுள் என்ன சொல்கிறார்?!-----இதோ
உனக்கு வேண்டுவன எல்லாம் என்னிடம் கேட்கின்றாய்
எனக்கு வேண்டுவ தென்ன வென்று நீ கேட்டதுண்டா?
பண்டிகைகள் கொண்டாடி படையல் படைக்கின்றாய்
உண்பதற்கு விதவிதமாய் செய்து மகிழ்கின்றாய்
பிள்ளையாராய்க் கும்பிட்டுக் கொழுக்கட்டை படைக்கின்றாய்
பிரப்பம் பழம் விளாம்பழமெனப் பலபழமும் கொடுக்கின்றாய்
கண்ணனாய் வணங்கி வெண்ணைய் வைக்கின்றாய்
எண்ணெய்ப் பலகாரம் பலவும் படைக்கின்றாய்.
கோவில்களில் எனக்கு பால் தயிர் பன்னீர் என்று
ஓய்வில்லாமல் அபிஷேகம் பலவும் செய்கின்றாய்.
உண்டியல் தேடிப் போய் பணம் நகை எனப் பலவும்
கொண்டு போய் நீ தவறாமல் கொட்டுகின்றாய்.
திருக் கல்யாணம் என்று சொல்லி யெனக்குத்
தினம் தினம் திருமணம் செய்விக் கின்றாய்
பட்டு வேட்டிப் புடவை கழுத்தில் தாலியெனப்
பலவும் வாங்கி யெனக்கு நீ அணிவிக்கின்றாய்
நான் உன்னை என்றுமே கேட்டதில்லை
எனக்கு இவையெல்லாம் கட்டாயம் வேண்டுமென்று
இன்று நான் சொல்கின்றேன் கேள் மனிதா
என் விருப்பம் என்னவென்று நீ அறிய.
நான் என்றுமே கொடுப்பவன்தான்,கேட்பவன் அல்ல!
படைக்கின்ற பழங்களெல்லாம் பசித்தவர்க்குக் கொடு
உடைக்கின்ற தேங்காயெல்லாம் நலிந்தவர்க்கு உண்ணக் கொடு.
குடம் குடமாய்க் கொட்டுகின்ற பாலெல்லாம் கொண்டு போய்
குடிக்கக் கஞ்சி கூட இல்லாக் குழந்தைகளுக்குக் கொடு.
எனக்குப் போர்த்துகின்ற வேட்டி சேலை இவை எல்லாம்
கனக்கின்ற குளிரில் வாடும் கணக்கற்றோருக்குக் கொடு.
கட்டுக்கட்டாய் உண்டியலில் கொட்டுகின்ற பணத்தில் நீ
கட்டித்தா இலவச கல்விச்சாலை,மருத்துவமனை இவையெல்லாம்.
திருக் கல்யாணம் செய்விக்கும் செலவினிலே
திக்கற்ற பெண்களுக்குத் திருமணம் செய்து வை!
என்னிடம் எப்போதும் நீ வரம் வேண்டி நிற்பாய்
இன்று நான் கேட்கின்றேன் இந்த வரம் நீ தா!
நன்றி : இராசாராம்...