Friday, July 29, 2011

பெரியார் பிறந்திராவிடில் ....

பார்ப்பனீய வேதாளம் வர்ண விக்ரமாதித்தன் தலையில்
நிரந்தரமாய் அமர்ந்து கொண்டிருக்கும் ...

சாலை கற்களெல்லாம் சாமிகளாகி
வாழ்க்கை போக்குவரத்தை விபத்துக்குள்ளாக்கும்...

பொறுக்கிக்கும் விலை மாதிற்க்கும் பிறந்தவர்கள்
மலத்திற்கிணையாய் மனிதனை மதித்திருப்பார்கள்...

IIT IIM ல் மட்டுமல்ல
எங்கும் இட ஒதுக்கீடு எட்டாக் கனியாயிருக்கும் ...

திருமணம் என்ற பெயரில்
பெண் வீட்டாரின் இரத்தம் உறிஞ்சப்பட
சுய மரியாதை இணைகள் கனவாயிருக்கும் ...

கற்பெனும் பெயரில் தோழிகள் வாழ்க்கை
கல்வி , கேள்வி ,கனவுகளின்றி
சமையலறைக்கும் படுக்கையறைக்குமிடையே
நடைபிணமாய் உறைந்திருக்கும் ...

விதி ,விதவை என்ற பெயர்களில்
விரும்பா வாழ்க்கை ரணமாய் வலிக்கும் ...

எழுத்து சீர்திருத்தங்களின்றி
சீக்காளியாய் தமிழ் சிதைந்திருக்கும் ...

சமஸ்கிருதமும் இந்தியும் விழிகளாக
குடல் வாலாய் தமிழ் குன்றிப் போயிருக்கும்

தமிழில் எழுதுவது போய்
பாலர் வகுப்பே இந்தியில் தாம் நடைபெறும்

தேசம் தேசியம் என்ற போர்வைகளில்
இன உணர்வற்ற தமிழன் தும்முவதற்க்கும்
காவடி எடுத்துக் கொண்டிருப்பான் தில்லிக்கு ...

பொதுமை கூடங்கள் சாத்திய மற்று
பட்டினி சாவுகள் தமிழகத்தை அலங்கரிக்கும் ...

கிராமத்தில் கள்ளுக் கடை போய்
கள்ளுக் கடையில் கிராமம் இருக்கும் ...

ராகுவும் கேதுவும் எமகண்டமும்
நிகழ் காலத்தை உதிர்கால மாக்கும் ...

மொத்தத்தில் தோழர் பிறந்திராவிடில்
94 வருடங்கள் தமிழன் பின் தங்கியிருப்பான் ...

-----நன்றி : இராசா ராம் -------

Wednesday, July 13, 2011

விலைமாது(A) ....[படித்ததில் பிடித்தது]

தொலைக்காட்சி,குளிரரூட்டி,நாற்காலி,கணினி
என எல்லாமிருந்த அறையில் அவர்களுக்கு
கட்டில் மட்டுமே தேவைப்பட்டது....

அவன் முயன்று முன்னேற
அவள் முனங்கிப் பின்வாங்கினாள்.

மனிதஇனத்தின் மகரந்த சேர்க்கை அங்கே
நடந்துகொண்டிருக்கிறது...
யார் பூ யார் வண்டு ஆராய்தல்
அவசியம் இல்லை...

ஆதாம் கண்டுபிடித்த ஆட்டம்
நிறைவு பெற்றது.
இளைத்துக் கலைத்தனர்- வியர்வை
முத்துக்கள் உடல் முழுக்க கோலம் போட்டது.

அவன் கலைமகன்.
அவள் விலைமகள்.

கற்பனையை பேனாவுக்குள் ஊற்றி
காட்சிகள் படைப்பவன் அவன்.
தன் உடலை பொதுவுடைமை
ஆக்கியவள் அவள்.

நாற்பதை தொட்டவன் அவன்.
இலக்கியம் இறுமாப்பு இரண்டும்
இரு கண்கள் அவனுக்கு...
குடும்பம்,பொறுப்பு போன்ற
இமைகள் கிடையாது..

பட்டினத்தாரையும் காதல் பாட்டு எழுத
வைக்கும் அழகு அவளது..
இந்த அவசர உலகம் கொடுத்த
"ஒரு மணி நேர மனைவி"- இவள்

ஜன்னல்களை திறந்தான். வானத்தை ஆராய்ந்தான்..
பேனா புத்தி அது
நிலவு நட்சத்திரங்கள் ஏதுமின்றி வானமும்
நிர்வாணமாய் இருந்தது......

புகைக்க தொடங்கினான்.
அவள் கோபம் கொண்டாள்.
கூடிய பின் புகைப்பது
அவனது நெடுநாள் பந்தம்.
ஆனால் புகைக்கக்கூடாதென்பது அவர்கள்
முன்னமே செய்த ஒப்பந்தம்!!!

அவனை ஏசினாள்.
காற்றை கற்பழிக்காதே என்றாள்.
அவனுக்கு கோபம் பற்றியது.
"வேசை தானே நீ... பலர் தொடும் பரத்தைக்கு திமிறென்ன??"
தீப்பிழம்பை கக்கினான்.
அவளோ எரிமலையானாள்.

அவள் கண்கள் சிவப்பானது.
அவனை ஏறிட்டு அற்பமாய் பார்த்தாள்.
"ஆம்.வேசை தான் நான்.." என
ஆரம்பித்து தொடர்ந்தாள்.

என்னிடம் வறுமைக்கதைகள் இல்லை.
நியாயப்படுத்தும் காரணங்கள் இல்லை.
உனக்குக் காமம் எப்படியோ
எனக்கும் அப்படியே...

துணை இழந்த வயதானவனின் வடிகால் நான்...
எங்கோ நடக்க இருக்கும் பாலியல் குற்றத்தைத்தடுக்கிறேன்...
உண்மையில் மிருகங்களின் காமங்களைந்து
மீண்டும் நாங்கள் தான் மனிதர்களாக்கி அனுப்புகிறோம்.
நாங்களில்லையேல் உன் சமுதாயம்
நாறி நாற்றமடிக்கும்....

இதுவும் ஒரு வியாபாரமே ....
ஏமாற்றில்லா...ஊழலில்லா... வியாபாரம்.
நீ அசைவம் கொலை என ஒத்துக்கொள்
நான் விபச்சாரம் தவறென ஏற்றுக்கொள்கிறேன்.

கற்பிழப்பவர் வேசை என்பது உன் சித்தாந்தமெனில்
நீயும் ஒரு வேசை தானே......

"வேசி" பெண்பால் என
எவன் சொன்னது??...

அவனருகே வந்து தாழ்ந்த குரலில்
மீண்டும் சொன்னாள்....

"உனக்குக் காமம் எப்படியோ
எனக்கும் அப்படியே...."


பேசிவிட்டு அறையிலிருந்து
விடைபெற்றாள்....

அவன் கண்ணிமைக்காமல் அவள்
சென்ற திசை நோக்கிக்கொண்டிருந்தான்.


தாளில் அடுத்த நாவலுக்குத் தலைப்பிட்டான்.
விலை(மதிப்பில்லா) மாது!!!!!!!!!!

----
நன்றி : இராசா ராம்----

Tuesday, July 12, 2011

புரியாத புதிர் ....

மௌனத்தால்
யுத்தம் செய்கிறாள்
அவள் ...
என்று பேசுவாள்
என மண்டியிட்டு
தவமிருக்கிறான்
அவன்...
கேள்விக்கனையால்
துளைத்தேடுக்கிறாள்
இவள் ...
எப்போதும் போல்
எதிரில் நிற்ப்பதை
தவிர்க்கிறான்
இவன் ...
அவன் நிறைய பேசுவான் ....
அவள் அமைதியாய் கவனிப்பாள்...
ஏக்கத்தோடு
"ஏதாவது பேசு..." என்பான் ...


இவள் நிறையவே பேசுகிறாள்
கேட்கத்தான் இவனுக்கு பொறுமை இல்லை .
"கொஞ்சம் நிறுத்துறியா ..."என்கிறான்
கோபத்தோடு .
ஏகப்பட்ட கேள்விகள் வரும்...
மௌனமாய் இருப்பான்...

எதிர்த்து பேசினால்
எப்போதுமே கண்ணீர் வரும் .
அவள் சிணுங்குவாள் ...

இவள் சீறுவாள் .....


பெண்களின் பலம்
கண்ணீர் ...
ஆண்களின் பலவீனமும்
அதுதான் .


இவன் நினைக்கிறான்
இவள் அவளாகவே இருந்திருக்கலாம் ...
இவள் நினைக்கிறாள்
இவன் அவனாகவே இருந்திருக்கலாம் ...

இரண்டும் தவறில்லை
அவன் என்பவன் காதலன் ..
இவன் என்பவன் கணவன் ..

அவள் என்பவள் காதலி
இவள் என்பவள் மனைவி...

எல்லாம் ஒன்று தான்
எதிபார்ப்புகள் சிதறுவதாலும்
எண்ணங்கள் சுருங்குவதாலும்
வருகின்ற உணர்வே
இதற்க்கெல்லாம் காரணம் ...


பேசியே கொல்வதும்...
பேசாமல் கொல்வதும் ...
பெண்களால் மட்டுமே முடியும்.